சுன்னாக்களின் பார்வையில் 01

சுன்னாக்களின் பார்வையில் இமாம் அலி அவர்களின் வரலாறு 01
முஸ்லிம் சமூதாயத்தில் பிரிவுகளுக்கு காரணமாய் அமைவது எது? என்பதில் பொது மக்களிடையே ஏற்படுகின்ற சந்தேகமாக இருக்கிறது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்கு பின் ஏற்பட்ட முரண்பாடுகளே இன்று வரை தொடர்கின்றது.
 இந்த முரண்பாடுகள் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் தெளிவாக இருக்கின்ற போதிலும் சிலர் இவர்களில் யார் சரியானவர்கள் என்பதில் இன்றுவரை தெளிவில்லாதவர்களே இருக்கின்றார்கள். உண்மையில் இந்த வரலாற்றில் ஏற்பட்ட துன்ப துயரங்கள் கொடுமைகளையெல்லாம் அறிந்திருந்தாலும் அவைகளை சாதரணமாக ஒரு வரலாற்று பார்வையாக மட்டும் பாhக்கிறார்கள். ஆனால் இன்னும் ஒரு சமூகம் இந்த வரலாற்று கொடூரங்களை எல்லாம் இஸ்லாத்திற்கும் நபிகளாருக்கும் செய்த கொடூமைகளாக படிப்பினையாக பார்க்கிறார்கள். காரணம் இந்த பிரச்சனை ஒரு அரசியல் பிரச்சனையாக மட்டும் பார்;க்க முடிவதில்லை. இந்த பிரச்சனை நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கிடையில் ஏற்றபட்ட பிரச்சனை. நபிகளாரால் நன்மாரயம் கூறப்பட்ட சமூகத்திற்கு நடந்த பிரச்சனை. எனவே அவர்களில் எதோ ஒரு சமூகத்தினர்தான் சத்தியத்திலும் மற்றுமொரு சமூகம் அசத்தியத்திலும் இருந்திருக்க முடியும். எனவே இதனை அரசியல் பார்வையாக மட்டும் பார்ப்பவர்கள் சுன்னாக்கள். அதனை அரசியல் ஆண்மீக பார்வையோடு பார்ப்பவர்கள் ஷீஆக்கள். ஆனாலும் ஷீஆக்கள் எதனை கொடூரங்கள் என்று சொல்லுகிறார்களோ அதனை சுன்னாக்களும் தமது வரலாற்றில் வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதை வாழ்க்கையில் கொண்டு வருவதிலும். சமூக கட்டமைப்பை ஒற்றுமையாக உருவாக்குவதிலும் இதனை ஏற்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் இதனை ஷீஆக்கள் சொல்கின்றபோது ஸஹாபாக்களை தூற்றுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை வீண்பழி சுமத்தி ஷீஆக்களின் உண்மையான வரலாற்றை படிப்பதிலிருந்து சமூதாய தேடல் நோக்கம் கொண்டவர்களை திசை திருப்புகின்றார்கள். அதன் காரணத்தினால் நாங்கள் இங்கு சரியான வழிகாட்டல் ஒன்றை கையாளுகிறோம். நபிகளாரின் குடும்பத்திற்கு அஹ்லுல்பைத்திற்கு செய்த துன்பங்களை துயரங்களை சுன்னாக்களின் பாதையிலேயே தெளிவு படுத்த நினைக்கின்றோம். இந்த உண்மைகளை அறிந்து அறியாதது போன்று இருக்கின்றார்களே அவர்கள் எழுதிய வரலாறுகளை நாம் இங்கு குறிப்பிட்டு கோடிட்டு காட்டுகிறோம்.

 எது சத்தியம் எது அசத்தியம் என்பதை இஸ்லாமிய உம்மா அறிந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்போடு. எனவே நாம் இதில் எந்த கைவிளையாட்டையும் ஏற்படுத்த வில்லை. அவர்களது இணைய தளங்களையும் நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். www.tamilislam.com

http://www.a1realism.com/history/ali(rali)%20-From%20his%20History.htm

நீங்கள் படித்து தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் நாம் இந்த வரலாற்றி விடு பட்ட சில நிகழ்வுகளையும் அதன் யதார்த்தத்தையும் எமது எழுத்துகளால் குறிப்பிட்டு தெளிவு படுத்த இருக்கிறோம்.

எனவே அல்லாஹ்வின் கூற்றுப்படி அசத்தியம் அழியும் சத்தியம் எழுந்து கொள்ளும்.

இதுவே தமிழ் இஸ்லாம் என்ற இணையதளத்திலிருந்து பெற்ற கட்டுரை குறிப்பிட்டு காட்டுகிறோம்

நான்காம் கலீஃபா

அலி (ரலி) வாழ்க்கை வரலாறு

________________________________________

• ஆரம்ப கால வாழ்க்கை

• இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்

• இறைத்தூதர் (ஸல்) நெருக்கம்

• கலந்து கொண்ட போர்கள்

• கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்

• முதல் உரை

• பிரச்னைகளைச் சந்தித்ததல்

• பேச்சுவார்த்தை

• புதிய கவர்னர்களுக்கு இனிமையான வரவேற்பு

• அலி (ரலி) நடவடிக்கை

• ஒட்டகப் போர்

• ஆயிஷா (ரலி) பஷராவைக் கைப்பற்றுதல்

• அலி (ரலி) தோழர்களும்

• கூஃபாவிலிருந்து வந்த உதவி

• பேச்சுவார்த்தை தோல்வி

• கடைசிப் போர்

• சிப்பீன் போர்

• சமாதானம்

• ஒரு மாத காலப் படைஎடுப்பு

• போர்

• நடுவர் தீர்ப்பு

• அலி (ரலி) படையில் பிளவு

• பரிசு

• காரிஜிய்யாக்கள்

• அலி (ரலி) அதிகாரம் பறிபோகுதல்

• எகிப்து தோல்வி

• அமைதியின்மை - குழப்பம்

• ஹிஜாஸ் மற்றும் எமன்

• அலி (ரலி) மரணம்

கவலையோடு.. சில வார்த்தைகள்!

மற்ற கலீஃபாக்களின் வாழ்க்கை வரலாற்றை ஆரம்பிக்கும் பொழுது இல்லாத கவலை, அலி (ரலி) அவர்களது வாழ்க்கையை ஆரம்பிக்கும் பொழுது, கண்ணீர் நீர்ப் பூக்கள் கோர்த்துக் கொண்டன. அன்றைக்கு ஆரம்பித்த உள்வீட்டுப் பிரச்னை இன்று வரைக்கும் தீர்க்கப்படாமலேயே சென்று கொண்டிருப்பதை வரலாறு நெடுகிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மேலும், இன்றைக்கு மார்க்க அறிஞர்கள் முதல் சாதாரண முஸ்லிம் வரைக்கும், அலீ (ரலி) வாழ்ந்த காலப் பகுதியில் வாழ்ந்தவர்களில் யார் மீது தவறு இருக்கின்றது, தவறிழைத்தவர்கள் யார்? என்பதில் குழப்பம் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது. எனவே, அலி (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை உங்களுக்கு நாம் வழங்கும் பொழுது, அதில் தவறுகளைக் காண்பீர்கள் என்று சொன்னால் அது நாம் எடுத்துக் கொண்ட மொழியாக்கத்தினைச் சார்ந்து தான், நாம் மொழிபெயர்த்து வழங்குகின்றோமே ஒழிய யார் மீதும் தவறு கண்டு பிடிக்கும் நோக்கத்துடன் இந்த மொழியாக்கத்தைச் செய்யவில்லை என்பதை மனதில் கொண்டு, விவாதங்களுக்கு வழி வகுக்காமல் வரலாற்றை மட்டும் பார்த்து, படிப்பினை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

ஆரம்பகால வாழ்க்கை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை முதன் முதலில் தனது இரத்த சொந்தங்களில் இருந்து ஆரம்பித்த பொழுது, அவர்களது குடும்பத்தவர்களில் அப்பொழுது அலீ (ரலி) அவர்களுக்கு வயது பத்து தான் ஆகியிருந்தது. அப்பொழுதே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதோடு, 'நான் எப்பொழுதும் உங்களுக்கு மிக நெருக்கமாகவே இருப்பேன்" யா ரசூலுல்லாஹ்..! என்று வாக்குறுதி அளித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு 30 வயது இளமைமையானவர். இவருடைய தந்தை அபூதாலிப், தாயார் ஃபாத்திமா ஆவார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே தந்தையாரை இழந்தார்கள். தந்தை இறந்ததன் பின்பு பாட்டார் அப்துல் முத்தலிப் அவர்களின் அரவணைப்பிலும், அடுத்ததாக தாயார் அமீனா அவர்களும் மரணமடைந்ததன் பின்பு, அலீ (ரலி) அவர்களின் தந்தையாரும், தனது சிறிய தந்தையுமான அபூதாலிப் அவர்களின் அரவணைப்பிலும் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வளர்ந்தார்கள்.

அபூதாலிப் அவர்களின் குடும்பம் மிகப் பெரியது. என்றாலும் அவர்களது குடும்பம் வசதியானது தான். அலீ (ரலி) அவர்கள் பிறந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நல்ல வாலிப் பருவத்தில் இருந்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மனைவியும், குழந்தைகளும் இருந்தார்கள். எனவே, அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களை தன்னுடன் வைத்துப் பராமரித்துக் கொண்டார்கள். இந்த நிலையில், அலீ (ரலி) அவர்கள் மிகவும் உன்னதமான குடும்பப் பராமரிப்பின் கீழ், எந்த வீடும் அளிக்கவியலாத பண்புப் பாசறையின் கீழ் அவர்களது இளமைக் கால வாழ்வு ஆரம்பமானது.

தனது இளமைக் காலத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் பெற்றுக் கொண்ட பயிற்சிகள், அவரது இறுதிக் காலம் வரைக்கும் நீடித்தன. மிகவும் கூர்மையான அறிவும், தொலைநோக்குச் சிந்தனையையும், சத்தியத்தை விரும்புகின்ற நெஞ்சத்தையும் அவை தந்து கொண்டிருந்தன. அனைத்திலும், அவரை எதற்கும் அஞ்சாத மாவீரராகவும், அல்லாஹ்வின் பாதையில் தன்னை அற்பணிக்கக் கூடியவராகவும் அவரை பரிணமிக்கச் செய்தது. இத்தகைய அரும் பெருங்குணங்கள் இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் அரிதாகக் காணக் கிடைக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்களாகும்.

2. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயிற்சிப் பாசறையில் இளமைக் கால வாழ்வை ஆரம்பித்த அலீ (ரலி) அவர்களுக்கு அப்பொழுது ஒன்பது வயதே ஆகியிருந்தது. அப்பொழுது தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துப் பணியை ஆரம்பம் செய்திருந்த கால கட்டம். ஒருநாள் அலீ (ரலி) அவர்கள் வீட்டில் இருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது துணைவியாரும் தரையில் தலையை வைத்து, சுஜுது நிலையில் இருப்பதைக் காண்கின்றார்கள். அவர்கள் அப்பொழுது அல்லாஹ்வைப் புகழ்ந்த வண்ணமும் இருந்தார்கள். இந்த அதிசய நிகழ்ச்சியை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த அலீ (ரலி) அவர்கள், இதுபோன்றதொரு நிகழ்வை நாம் எங்கும் எப்பொழுதும் கண்டதில்லையே, என்ற சிந்தனையில் ஆழ்ந்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பின், அவர்களை அணுகிய அலீ (ரலி) அவர்கள், சற்று முன் நான் பார்த்த காட்சிக்கு என்ன அர்த்தம் என்று வினவினார்கள்.

நாங்கள், நம்மைப் படைத்த வல்லோனாகிய, ஏகனாகிய அல்லாஹ்வைத் தொழுது கொண்டிருந்தோம் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலிறுத்து விட்டு ...,

நான் உங்களுக்கு ஒரு அறிவுரை ஒன்றைக் கூறுகின்றேன். நீங்கள் எப்பொழுதும் அந்த லாத், உஸ்ஸா, அல்லது வேறு எந்த சிலைகளுக்கு சிர வணக்கம் செய்யாதீர்கள், சற்று நீங்கள் பார்த்தீர்களே..! அதைப் போல உங்களைப் படைத்த ஏகனுக்கு மட்டும் சிர வணக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

நான் இதுபோல எப்பொழுதும் கேள்விப்பட்டதில்லையே,! இது அலீ (ரலி) அவர்கள். நான் எனது தந்தையிடம் முதலில் இது பற்றிக் கலந்து விட்டு வந்து உங்களுக்குப் பதில் சொல்கின்றேன் என்று கூறினார்கள் அலீ (ரலி) அவர்கள்.

அலீயே..! நீங்கள் இங்கு பார்த்ததை யாரிடமும் இப்போதைக்குக் கூற வேண்டாம். நீங்களாகவே சிந்தியுங்கள், அதனை உங்களது மனதிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த அறிவுரை அவருக்கு நல்லதாகவே பட்டது. எனவே, அதுபற்றிச் சிந்திக்கலானார்கள். சிந்தனைத் தெளிவுக்குப் பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்களுயை கருத்தினை ஏற்றுக் கொண்டார்கள். அடுத்த நாள் காலை இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். இளைஞர்களிலேயே அலீ (ரலி) அவர்கள் தான் முதன் முதலில் இஸ்லாத்;தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட வரலாற்றுப் பெருமை கொண்டவர்கள். இந்த வயதில் இவ்வளவு சுதந்திரமாக சிந்தித்து, ஒரு கொள்கையை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் அரிதானதொன்று..! அதனைக் காட்டிலும் தனது கண் முன் தனது சமுதாயம் ஒரு பாதையில் போய்க் கொண்டிருக்கும் பொழுது, சத்தியத்தைத் தேடி தனது சிந்தனைக் கதவுகளைத் திறந்து வைப்பதென்பது நினைத்தும் கூட பார்க்கவியலாத வயது அது..! ஆனாலும் சத்தியத்தை அவர்கள் எவ்வளவு விரும்பினார்கள், அதன் மீது எந்தளவு காதல் கொண்டிருந்தார்கள் என்பதைத் தான் அவர்களது சிந்தனைத் தெளிவு நமக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

3. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நெருக்கம்

அலீ (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வளர்ந்தார்கள். அதன் காரணமாக வாழ்க்கை பற்றியும், இன்னும் இறைநம்பிக்கை பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் மிகவும் ஆழமான அறிவைப் பெற்றார்கள். எனவே, இது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறும் பொழுது :

''நான் அறிவுலகத்தின் நகரம் என்றால், அலீ அதன் வாசலாவார்"" என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது அலீ (ரலி) அவர்கள் தீராத அன்பு கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் கிளம்பிய அன்றைய இரவில், இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொன்று விடுவதற்கு இரத்த தாகம் எடுத்த குறைஷிகள் அவர்களது வீட்டைச் சுற்றிலும் தயாராகக் காத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றிலும் எங்கும் வாள்கள் பளபளத்துக் கொண்டிருந்தன. காலையில் வீட்டை விட்டு வெளியே வரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை கண்ட துண்டமாக வெட்டிக் குதறுவதற்காக அந்த மனிதக் கழுகுகள் காத்துக் கொண்டிருந்தன.

அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அலீ (ரலி) அவர்களைப் பார்த்து, நீங்கள் எனது படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். நான் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்கின்றேன் என்று கூறினார்கள்.

மிகவும் உவகையோடு அலீ (ரலி) அவர்கள் எந்த மறுப்புமின்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கையில் படுத்துக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிரிகளின் சதித்திட்டத்திலிருந்து காத்து விட்ட நிம்மதி. அந்த நிம்மதியிலேயே அன்றைய இரவை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் படுக்கையில் தூங்கிக் கழித்தார்கள்.

மறுநாள் காலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களது படுக்கையில் அலீ (ரலி) அவர்களைக் கண்ட மக்கத்துக் குறைஷிகள் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோமே என கைசேதப்பட்டனர், அலீ (ரலி) தான் தன்னுடைய உயிரைப் பணயமாக வைத்து, முஹம்மதைத் தப்பி ஓட வைத்து விட்டார் என்று உறுமிக் கொண்டனர். அலீ (ரலி) அவர்கள் இவை அத்தனையும் எந்த சலனமுமில்லாமல் எதிர்கொண்டதுடன், அலீ (ரலி) அவர்களை எதுவும் செய்யமால், அந்த இடத்தை விட்டும் அகன்றனர்.

மக்கத்துக் குறைஷிகள் தங்களது பொருட்களை பாதுகாப்பிற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமே கொடுத்து வைத்திருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவ்வளவு அவர்கள் எதிர்த்த பொழுதும், தங்களது பொருட்களை பாதுகாப்பதற்கு அவரை விட்டால் வேறு யார் இருக்கின்றார்கள் என்று நினைத்து, அவரிடம் தான் கொடுத்தும் வைத்திருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஹிஜ்ரத்திற்கு முன்பாகவே அனைத்துப் பொருட்களையும் உரியவர்களிடம் சேர்ப்பித்து விடும்படி, அலீ (ரலி) அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். அதன் பின் அலீ (ரலி) அவர்கள் மக்காவில் மூன்று நாள் தங்கி இருந்தார்கள். மக்களின் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சேர்ந்து கொள்வதற்காக மக்காவை விட்டு அலீ (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குக் கிளம்பினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் மிகவும் நெருங்கிய இரத்த உறவு முறை உடையவராக இருப்பினும், இன்னும் அதிக நெருக்கத்துடன் அலீ (ரலி) அவர்களைப் பார்க்க விரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது கடைசி மகளும், தனது அன்பிற்குப் பாத்திரமான மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அலீ (ரலி) அவர்கள் தனக்குக் கிடைத்த கௌரவத்தை உணர்ந்தவர்களாக நடந்து கொண்டார்கள். இன்னும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் வரைக்கு அடுத்த பெண்ணை அவர்கள் மணக்கவில்லை. அலீ (ரலி) மற்றும் ஃபாத்திமா (ரலி) தம்பதியினருக்கு ஹஸன் மற்றும் ஹ{ஸைன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். அவர்களை தனது சொந்த மகனைப் போல இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாசமழை பொழிந்தார்கள்.

ஹிஜ்ரி 9 ம் ஆண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரியாவை நோக்கிப் படையெடுப்பு ஒன்றை நடத்தினார்கள். அது தபூக் போர் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் படைக்குத் தலைமை தாங்கிச் செல்கின்ற காரணத்தால், அவர்கள் வரும் வரைக்கும் மதீனாவின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துமாறு அலீ (ரலி) அவர்களைப் பணித்தார்கள். இதுவே, அலீ (ரலி) வருத்தமடையச் செய்தவற்கான வழியை வேஷதாரிகள் உண்டாக்க காரணமாக அமைந்தது.

அலீயைத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லை என்று அந்த வேஷதாரிகள் பிரச்சாரம் செய்தார்கள்.

இந்தச் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களது காதுகளுக்குச் சென்ற பொழுது, அலீ (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,

அலியே..! ''மூஸா (அலை) அவர்களுக்கும் ஹாரூன் (அலை) அவர்களுக்கும் இருந்த உறவு முறை போல நமது உறவு முறை இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பவில்லையா?"" என்று கேட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த வார்த்தை அலீ (ரலி) அவர்களை அன்பால் கட்டிப் போட்டது. வேஷதாரிகளின் விஷ வார்த்தைகளும் அடங்கியது.

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு முதல் ஹஜ் நடைபெற்றது. அந்த நேரத்தில், இணைவைப்பாளர் கஃபாவில் நுழையக் கூடாது என்று இறைவன் கட்டளை விதித்தான். இந்தக் கட்டளையை ஹஜ்ஜில் மக்கள் கூடுகின்ற பொழுது தான் அறிவிக்க முடியும். அன்றைய கால வழக்கப்படி, இந்த அறிவிப்பை இறைத்தூதர் (ஸல்) அவர்களோ, அல்லது அவருக்கு நெருங்கிய உறவினர்களோ தான் செய்ய முடியும் என்றிருந்த நிலையில், இந்தப் பணிக்கு அலீ (ரலி) அவர்களை இறைத்தூதுர் (ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள். தனது சொந்த ஒட்டகமான கஸ்வாவை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, அல்லாஹ்வின் உத்தரவை அறிவிக்கச் சொன்னார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது இறுதிக்காலத்தில் சுகவீனம் அடைந்த பொழுது, அவர்களுக்கு மிக அருகிலேயே இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்திய பொழுதும் அங்கே தான் இருந்தார்கள்.

இறைவசனங்களை எழுதக் கூடிய எழுத்தாளராகவும் அலீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அனுப்பப்படக் கூடிய கடிதங்களை எழுதக் கூடிய எழுத்தராகவும் அலீ (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட 10 நன்மக்களில் அலீ (ரலி) அவர்களும் ஒருவராவார். இவருக்கு முன் ஆட்சி செலுத்திய மூன்று கலீபாக்களும் அலீ (ரலி) அவர்களிடம் நிர்வாக விஷயங்களில் ஆலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.

''அலீ (ரலி) அவர்கள் நம்மிடையே உள்ள மிகச் சிறந்த நீதிபதி"" என்று உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அல்ல பலமுறை உமர் (ரலி) அவர்கள் மதீனாவை விட்டு வெளியே செல்ல நேர்ந்த பொழுதெல்லாம், அலீ (ரலி) அவர்களை தற்காலிக கலீபாவாக நியமித்து விட்டுச் செல்லக் கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில், கொடுக்கப்பட்ட பொறுப்பை திறம்படச் செய்யக் கூடியவர் என்று உமர் (ரலி) அவர்கள் கருதியதே காரணமாகும். உமர் (ரலி) அவர்கள் தனக்குப் பின் அலீ (ரலி) அவர்களைக் கலீபாவாக நியமனம் செய்து விட்டுப் போகாததன் காரணம் என்னவெனில், தனக்குப் பின் அலீ (ரலி) அவர்களைத் தான் மக்கள் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பியதே காரணமாகும்.

உதுமான் (ரலி) அவர்களது காலத்தில், அரசியல் விவகாரங்களில் சரியான நிர்வாக அமைப்பினை உருவாக்குவதற்கு அலீ (ரலி) அவர்கள் தனது வலிமையான கருத்தைப் பயன்படுத்தினார்கள். இதற்கு முன்னிருந்த கலீபாக்களும் இதே நடைமுறையைப் பின்பற்றி, ஆட்சி முறையில் தமது தோழர்களால் வழிநடத்திச் செல்லப்படக் கூடியவர்களாகத் தான் இருந்தார்கள்.

கலந்து கொண்ட போர்கள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர்களில், தபூக் போரைத் தவிர மற்ற அனைத்துப் போர்களிலும் அலீ (ரலி) அவர்கள் கலந்து கொண்டார்கள்.

பத்ருப் போரில் அலீ (ரலி) அவர்கள் கலந்து கொண்டு போரிட்ட பொழுது, அவர்களது வாள் அற்புதத்தையே நிகழ்த்தியது எனலாம். குறைஷித் தரப்பிலிருந்து மார்தட்டிக் கொண்டு களத்தில் இறங்கிய மூன்று எதிரிகளில் இருவரை அலீ (ரலி) அவர்கள் ஒருவரே கொன்று தரையில் வீழ்த்தினார்கள், அலீ (ரலி) அவர்களின் இந்த வீர விளையாட்டைப் பார்த்த எதிரிகளின் மனதில் அப்பொழுதே தோல்வி பயம் கவ்விக் கொண்டது.

உஹதுப் போர்க்களத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிக அருகில் நின்று போரிடக் கூடிய வாய்ப்பை; பெற்றார்கள். வில் வித்தை வீரர்கள் செய்த தவறின் காரணமாக அந்தப் போரில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. முஸ்லிம் வீரர்களின் அணிகள் கூட பயத்தின் காரணமாக, கலைந்தன. ஏன், களத்தை விட்டே ஓட்டமெடுத்தனர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகக் கூட வதந்திகள் பரப்பப்பட்டன. இத்தகைய குழப்பமான அந்த நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நிலைகுலையாமல் நின்று கொண்டிருந்த ஒரு சில நபித்தோழர்களில் அலீ (ரலி) அவர்களும் ஒருவராவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது விழுந்த பலத்த அடியின் காரணமாக அவர்களது முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. தலைக்கவசத்தின் இரும்புப் பகாம் ஒன்று அண்ணலார் (ஸல்) அவர்களின் முகத்தில் ஊடுறுவி இருந்தது. அதனை அபுபக்கர் (ரலி) அவர்களும், தல்ஹா (ரலி) அவர்களும் பிடுங்கி எடுத்து, வேதனையைக் குறைத்தனர். அந்தக் காயத்திற்கு அலீ (ரலி) அவர்களும், பாத்திமா (ரலி) அவர்களுமே சிகிச்சை அளித்தார்கள். இந்தப் போரில் அலீ (ரலி) அவர்களுக்குக் கூட 17 இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது.

ஹிஜ்ரி 5ம் ஆண்டில், இஸ்லாத்தின் அனைத்து எதிரிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று திரண்டனர். மதீனாவை நோக்கி மிகப் பெரும் படையுடன் கிளம்பினர். மதீனாவைக் காக்கும் பொருட்டு மதீனாவைச் சுற்றிலும் அகழ் ஒன்றை இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் தோண்டினார்கள். ஒருநாள் எதிரிகளின் தரப்பிலிருந்து, அரேபியாவின் மிகப் பிரசித்தி பெற்ற வீரனான அப்து என்பவன், அந்த அகழியை குதிரையில் இருந்தவாறே தாண்டி விட்டான். அவனை எதிர்த்து நிற்பதற்கு அனைவரும் பயந்தனர், அவனருகே செல்வதற்குக் கூட முஸ்லிம்கள் பயந்து கொண்டிருந்த பொழுது, அவனை எதிர்த்துப் போர் புரிவதற்கு அலீ (ரலி) அவர்கள் முன் வந்தார்கள்.

அலீ அவர்களே..! கவனம் தேவை. அவன் அப்தூத்..! இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையாக இருந்தது.

நல்லது, அவனைப் பற்றி நான் அறிவேன், இது அலீ (ரலி) அவர்களது பதிலாக இருந்தது.

சற்றுச் சில நிமிடங்களில் அலீ (ரலி) அவர்கள், அந்த எதிரியினுடைய கழுத்தை அவனது உடலிலிருந்து துண்டித்தார்கள். அவன் சாய்ந்த பனை மரம் போல விழுந்தான்.

இன்னும் மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்த பனூ குரைளா என்ற யூதக் குலத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வந்த காரணத்தாலும், இஸ்லாத்தின் எதிரிகளுக்கு உதவிக்கரம் நீட்டி வந்ததாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் முஸ்லிம்களின் நிலை இன்னும் மோசமாக மாறி விடும் என்ற நிலையில், அவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் நிலை உருவாகியது. இறுதியாக, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள். யூதர்களது வலுவான கோட்டைகளை முற்றுகையிட்டார்கள், அவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள், இன்னும் அவர்களது கோட்டைகளிலேயே அன்றைய தொழுகையை நடத்தினார்கள்.

இன்னும் கைபர் என்ற இடத்தில் யூதர்களது வலுவான கோட்டைகள் தொடர்ச்சியாக இருந்தன. இந்தக் கோட்டைகள் இருந்து வருவது என்றைக்கும் முஸ்லிம்களுக்கு ஆபத்துக்களை விளைவிக்கக் கூடியதாக இருந்தது. முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதத்தில் அமைந்துள்ள அந்தக் கோட்டைகளை எதிர்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது படைகளை அனுப்ப முடிவு செய்தார்கள். முஸ்லிம்களை எதிர்த்து, கடுமையான தடைகளை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள் யூதர்கள். இருப்பினும்,அவர்களது கோட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களின் வசம் வீழ்ந்து கொண்டிருந்தது. இருப்பினும், 'குமாஸ்" என்ற கோட்டையை மட்டும் முஸ்லிம்களால் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்தது. அந்தக் கோட்டையின் தளபதியாக இருந்த மர்ஹப் என்பவனின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக முஸ்லிம்களால் அந்தக் கோட்டையை ஒன்றும் செய்ய இயலாமல் இருந்தது. இந்த நிலையில், இறைத்தூதர் (ஸல்) அவாகள் கூறினார்கள், ''நாளைக்கு நான் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மிகவும் நேசிக்கக் கூடிய புதியதொரு தளபதியை நியமிக்கப் போகின்றேன். அல்லாஹ் அவருக்கு வெற்றியை அருளுவான்"" என்று கூறினார்கள்.

யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், மறுநாள் காலையும் புலர்ந்தது. அடுத்த நாள் காலையில், மக்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த வீரரை மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய போரின் தலைமைப் பொறுப்பை ''அலீ (ரலி) அவர்களிடம் வழங்கினார்கள். அன்றைய தினம் நடந்த போரில் மர்ஹப் ம் அவனது சகோதரனும் கொல்லப்பட்டார்கள், கோட்டை முஸ்லிம்களின் வசம் வீழ்ந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பும் நிறைவேறியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..!

ஹ{தைபிய்யா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கையை மக்கத்துக் குறைஷிகளுடன் முஸ்லிம்கள் முதன் முதல் ஏற்படுத்தின் கொண்ட போது, அதன் எழுத்தராக அலீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்த உடன்படிக்கையின் வாசகங்களைக் கூறக் கூற, அலீ (ரலி) அவர்கள் எழுதிக் கொண்டு வந்தார்கள். குறைஷிகளின் தூதர்கள் அந்த உடன்படிக்கையின் எழுதப்பட்ட வாசகமான, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயருக்கு முன்னால், அல்லாஹவின் தூதர் என்று எழுதப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அதற்குப் பதிலாக முஹம்மது பின் அப்துல்லாஹ் என்று எழுதும்படி வற்புறுத்தினர். அவ்வாறு மாற்றி எழுதுவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இருப்பினும் எழுதப்பட்ட அந்த, ''அல்லாஹ்வின் தூதர்"" என்ற வார்த்தையை தனது கரங்களால் அழிப்பதற்கு அலீ (ரலி) மறுத்து விட்டார்கள். அதன் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களே.. தனது கரங்களால் அந்த வார்த்தையை அழித்தார்கள்.

மக்காவின் வெற்றியின் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழையும் பொழுது முஸ்லிம்களின் கொடியை அலீ (ரலி) அவர்களின் கரங்களில் தான் கொடுத்தார்கள்.

உஹதுப் போரிலும், ஹ{னைன் போரிலும் முஸ்லிம்களின் தரப்பில் சில சலனங்கள் ஏற்பட்ட பொழுது, அந்த சலனங்களுக்கு இடம் கொடாமல், துணிந்த நின்று போர் செய்த ஒரு சில பெருமக்களில் அலீ (ரலி) அவர்களும் ஒருவராவார்.



கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்

உதுமான் (ரலி) அவர்கள் இறந்த பிறகு, கலீபாவாக யாரையும் தேர்ந்தெடுக்கப்படாமலேயே மூன்று நாட்கள் கழிந்தன. இப்பொழுது மதீனா முழுவதும் கலவரக்காரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. காஃப்கி என்ற எகிப்தினைச் சேர்ந்த இவர் தான் கலவரத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார், இப்பொழுது இவரே தலைமை தாங்கி இமாமாக நின்று கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். இந்த கொடூரமான மனித இனப் படுகொலையானது மதீனாவில் நடந்து கொண்டிருந்த இந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமான நபித்தோழர்கள் மதீனாவை விட்டும் வெளியேறிச் சென்று விட்டார்கள். மதீனாவை விட்டும் வெளிச் செல்லாமல் தங்கி இருந்தவர்களோ, எந்தவித உதவியுமின்றி, இதனைத் தடுத்த நிறுத்த சக்தியற்றவர்களாக இருந்தார்கள். இன்னும், இவர்கள் தங்கள் வீடுகளுக்குள் இருந்து கொண்டு, கலவரக்காரர்கள் தாங்கள் நினைத்ததை சாதித்து முடித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டு, அமைதி காத்தார்கள்.

இந்த கலவரக்காரர்கள் தான் அலீ (ரலி) அவர்களின் பெயரை கலீபா பதவிக்கு முன்மொழிந்தார்கள். இன்னும் அவரையே கலீபாவாக பதவியேற்றுக் கொள்ளும்படி வேண்டி நின்றார்கள். அலி (ரலி) அவர்களோ முதலில் அவர்களது இந்தக் கோரிக்கையை மறுத்தார்கள். ஆனால், இந்தக் கலவரச் சூழலை யாராவது ஒருவர் முன்னின்று அமைதிக்குக் கொண்டு வர வேண்டிய அவசியமும் அங்கு நிலவியது. தலைநகரத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற அத்தனையும் இஸ்லாத்திற்கு முரணாகவே நடந்து கொண்டிருந்தன. இப்பொழுது அலி (ரலி) அவர்கள், மதீனாவில் எஞ்சியிருந்த நபித்தோழர்களை அழைத்து கலந்தாலோசனை நடத்த ஆரம்பித்தார்கள்.

அலீ (ரலி) அவர்களே..!

கலவரச் சூழல் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள், இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஏதேனும் செய்யுங்கள், மக்களுக்கு அமைதி தேவையாக இருக்கின்றது என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.

எனவே, நிலைமையின் பாரதூரத்தை எடை போட்டுப் பார்த்த அலீ (ரலி) அவர்கள், முஸ்லிம்களிடையே ஏற்பட்டு விட்ட இந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவராக, கலீபா பதவியைத் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள்.

இப்பொழுது மதீனாவில் வசித்த அனைவரும், அலீ (ரலி) அவர்களிடம் வந்து தங்களது பைஅத் என்ற வாக்குறுதியை அளித்தார்கள். மாலிக் உஸ்தர் என்பவர் தான் இந்த வாக்குறுதி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.

தல்ஹா (ரலி) மற்றும் ஜுபைர் (ரலி) ஆகிய இருவரும், அப்பொழுது மதீனாவில் இருந்த முக்கியமான நபித்தோழர்களாவார்கள். தனக்குப் பின் கலீபாவாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று உமர் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவில் இந்த இருவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த இருவருடைய சம்மதத்தையும், இன்னும் இந்த இருவரில் யாருக்காவது கலீபாவாக ஆக விரும்பம் இருக்கும்பட்சத்தில் அதனையும் முயற்சி செய்து பார்த்துவிடுவது என்ற நோக்கத்தில் இருவரையும் அழைத்து வர ஆள் அனுப்பி வைத்தார்கள்.

இன்னும் இவர்களில் எவரொருவராவது கலீஃபாவாக ஆக விரும்பினார் எனில், அவரிடம் நான் எனது வாக்குறுதியை அளிக்கத் தயராக இருக்கின்றேன் என்றும் அலீ (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆனால் இந்த இருவரும், இந்த மிகச் சுமையான பொறுப்பை ஏற்பதிலிருந்தும் விலகிக் கொண்டனர். அப்படியானால், என்னிடம் வாக்குறுதி அளியுங்கள் - பைஅத் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார், அலீ (ரலி) அவர்கள்.

சம்மதமின்மை காரணமாக ஜுபைர் (ரலி) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்பொழுது, அங்கிருந்த மாலிக் உஸ்தர், கூறினார் :

ஜுபைரே..! அலீ (ரலி) அவர்களிடம் பைஅத் செய்கின்றீர்களா? எனத் தனது வாளை உருவியவாறே.., இல்லை உங்களது தலையைத் துண்டாடட்டுமா? எனக் கேட்டார்.

பின், ஜுபைர் (ரலி) அவர்கள் தனது வாக்குறுதியை அளித்தார்.

அடுத்தது, சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களது முறை, அவரும் அழைக்கப்பட்டார், உமர் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட அறுவரில் இவரும் ஒருவர்.

என்னைப் பற்றிப் பயப்பட வேண்டாம், இத்தனை நபர்களும் உங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கும் பொழுது, நான் மறுக்க மாட்டேன், நானும் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றேன் என்றார்.

அடுத்தது, அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களது முறை. அவரும் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் பதிலையே கூறி, வாக்குறுதி அளித்தார்.

யாராவது ஒருவர் உங்களுக்காக பிணையாளாக வந்து வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றார் அலீ (ரலி).

எனக்காக யாரையும் பிணையாளாகத் தர வேண்டியதில்லை. பதில் வந்தது.

மாலிக் உஸ்தர் எழுந்தார். அவரை என்னிடம் விடுங்கள், தலையைக் கொய்து விடுகின்றேன்.

வேண்டாம், வேண்டாம்..! என்று கூறிய அலீ (ரலி) அவர்கள், அவருக்கு நானே பிணையாளாக இருந்து கொள்கின்றேன் என்று கூறினார்கள்.

இன்னும் முன்னணி நபித்தோழர்கள் பலர் அலீ (ரலி) அவர்களுக்கு வாக்குறுதி வழங்கவில்லை. உமைய்யா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிரியாவை நோக்கிச் சென்று விட்டார்கள். இரத்தம் தோய்ந்த உதுமான் (ரலி) அவர்களின் ஆடைகளைத் தங்களுடனேயே எடுத்துச் சென்று விட்டதல்லாமல், உதுமான் (ரலி) அவர்களின் மனைவியாகிய நைலா (ரலி) அவர்களின் துண்டிக்கப்பட்ட விரல்களையும் எடுத்துச் சென்று விட்டார்கள்.

முதல் உரை

அலீ (ரலி) அவர்கள் கலீபாவாகப் பதவியேற்ற பின்பு முதன்முதலாக உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். அவர்களது உரை தெளிவாகவும், கடுமையாகவும் இருந்தது.

கஃபாவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் புனிதமானவை. முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதரைத் தனது நாவினாலோ அல்லது செயல்களினாலோ துன்பம் விளைவிக்க மாட்டார். உங்களது செயல்பாடுகளில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, உயிர் கொடுத்து எழுப்பப்படக் கூடிய அந்த மறுமை நாளில் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றீர்கள், மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்கினங்களிடம் கூட உங்களது செயல்பாடுகளைப் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். அவனது கட்டளைகளைப் புறக்கணித்து விடாதீர்கள். நன்மையைச் செய்யுங்கள், தீமைகளில் இருந்து விலகியிருங்கள்.

தான் செல்லக் கூடிய பாதை மிகவும் கடினமானது என்பதை அலீ (ரலி) அவர்கள் நன்கறிந்தவர்களாக இருந்தார்கள். சட்டம் ஒழுங்கு பேணப்படாத அந்த நேரத்தில், அதனை மீட்டுக் கொண்டு வர வேண்டியதிருந்தது. இன்னும் அதற்காகத் தொடர்ந்து இடைவிடாது பாடுபட வேண்டி இருந்தது, அதற்காகப் பொறுமையுடன் பணியாற்ற வேண்டி இருந்தது. அலீ (ரலி) அவர்கள், இந்த விஷயத்தில் மக்கள் தனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.

பிரச்னைகளைச் சந்தித்தல்

அலீ (ரலி) அவர்களது முதல் உரை முடிந்தவுடன், நபித்தோழர்களில் சிலர் அலீ (ரலி), ஜுபைர் (ரலி) மற்றும் தல்ஹா (ரலி) ஆகியோரைச் சந்தித்தார்கள்.

நீங்கள் இப்பொழுது கலீபாவாகப் பதவி ஏற்றிருக்கின்றீர்கள் என்று வந்தவர்களில் ஒருவர் கூறி விட்டு, நீங்கள் செய்ய வேண்டிய முதல் பணி, இஸ்லாமிய ஷரீஆ வை நிலைநாட்ட வேண்டும் என்றார். இன்னும் உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் இதில் தவறு செய்ய மாட்டீர்கள் என்பதால் தான் நாங்கள், உங்களுக்கு எங்களது வாக்குறுதியைத் தந்தோம் என்று கூறினார்கள்.

உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலை செய்தவர்களைத் தண்டிக்காமல் நான் விட்டு விடப் போவதில்லை. ஆனால் அதற்கு சற்று கால அவகாசம் தேவை, சற்றுப் பொறுத்திருங்கள் என்று கேட்டுக் கொண்டார் அலீ (ரலி) அவர்கள்.

மதீனாவின் நிலமை இன்னும் சீராகவில்லை. கலவரக்காரர்கள் இன்னும் பலத்துடன் மதீனாவில் உலா வந்து கொண்டிருக்கின்றார்கள். நாம் கூட அவர்களது அச்சுறுத்தல்களின் கீழ் தான் இருந்து வருகின்றோம் என்று கூறினார். இன்னும் சொல்லப் போனால், என்னுடைய நிலமையே ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றது. எனவே, தயவு செய்து பொறுமையோடிருங்கள். சூழ்நிலைகள் நமக்கு சாதகமானதுடன், நிச்சயமாக, குற்றவாளிகளை நான் தண்டிப்பேன், அது என்னுடைய கடமையும் கூட என்று கூறினார், அலீ (ரலி) அவர்கள்.

அலீ (ரலி) அவர்களின் பதில் வந்திருந்தோருக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. அவர்களில் சிலர், அலீ (ரலி) அவர்கள், பிரச்னையில் இருந்து ஒதுங்க நினைக்கின்றார் என்றே கருதினார்கள்.

அலீ (ரலி) அவர்களே நீங்கள் விபரம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்,

மக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது, உதுமான் (ரலி) அவர்களைப் படுகொலை செய்தவர்களை நீங்கள் தண்டிக்கவில்லை என்று சொன்னால், மக்களே சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, செயல்பட ஆரம்பித்து விடுவார்கள், என்று கூறினார்கள்.

இப்பொழுது, என்ன நடக்கும் என்பதை கலவரக்காரர்களுக்கு உணர்த்த வேண்டும். கலவரத்தை நிறுத்தவில்லை எனில், அலீ (ரலி) அவர்கள் நிச்சயம் நம்மைத் தண்டிப்பார் என்பதை அவர்கள் உணர வேண்டும். மதீனாவில் நிரந்தரமாகக் குழப்பம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இதற்காகவே ஒரு குழுவினர் மற்ற குழுவினரிடம் இணக்கமாகி விடாமல், குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே வருகின்றார்கள். இன்னும் ஒவ்வொரு இடத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள். அவர்களது முழுமையான நோக்கம் என்னவெனில், மதீனாவில் உள்ள தலைவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கி, அதன் மூலம் குழப்பத்தை நீடிக்கச் செய்து, தாங்கள் தண்டனையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்பதேயாகும். இதன் மூலம் தங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கின்றார்கள்.

அலீ (ரலி) அவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்பு, தான் இன்னும் மிக மோசமாக பாதையைக் கடக்க வேண்டியதிருக்கின்றது என்பதை உணர ஆரம்பித்தார்.

தன்னை கலவரக்காரர்கள் ஏன் தேர்ந்தெடுக்க முன் வந்தார்கள் என்பதும், இன்னும் அதற்காக அவர்கள் கையாண்ட முறையையும் அலீ (ரலி) அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இன்னும் அவர்களைத் தண்டித்தே ஆக வேண்டும் என்பதிலும் அலீ (ரலி) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதற்காக ஒட்டு மொத்த நபித்தோழர்கள் மற்றும் அனைத்து அதிகார மட்டத்தின் ஆதரவும் தனக்குத் தேவை என்பதையும் அலீ (ரலி) அவர்கள் விரும்பினார்கள். ஆனால், அவர் விரும்பியவாறு அவருக்கு முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, பொறுத்திருந்து நிலைமையைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் அலீ (ரலி) அவர்களுக்கு உருவானது.

ஆனால், நபித்தோழர்களோ..! உடனடி நடவடிக்கையை விரும்பினார்கள். அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் எடுக்கப்பட்டது போன்றதொரு நடவடிக்கை அவசியம் என்று விரும்பினார்கள். ஆனால், அப்போதிருந்த சூழ்நிலைக்கும், இப்பொழுது உள்ள சூழ்நிலைக்கும் உள்ள வேறுபாட்டைப் பிரித்தறியத் தவறி விட்டார்கள்.

இது தான் நபித்தோழர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்குமிடையே கருத்துவேறுபாட்டை உருவாக்கியது. தவறு செய்தவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே முன்னணி நபித்தோழர்களின் விருப்பமாக இருந்தது, அதற்கு அலீ (ரலி) அவர்களின் ஆட்டம் கண்டு கொண்டிருந்த தலைமைப் பதவி இடம் கொடுக்க மறுத்தது. எனவே, இந்தப் பிரச்னையில் சரியான முடிவெடுக்கத் திணறி நின்ற அலீ (ரலி) அவர்கள், நபித்தோழர்களுக்கு சரியான பதிலை வழங்க இயலவில்லை.



பேச்சுவார்த்தை முயற்சிகள்

உதுமான் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் யாவும், அவரைச் சுற்றி இருந்த அவரது உறவினர்களினால் விளைந்தவைகள் தான் என்பதில் அலீ (ரலி) அவர்கள் மிகவும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார்கள். உதுமான் (ரலி) அவர்களைச் சுற்றி ஆட்சிப் பொறுப்பில் இருந்த உமையாக்களின் வாரிசுகள் தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தலையாய காரணமாக இருந்தார்கள். உதுமான் (ரலி) அவர்களின் நற்பெயரை அவர்கள், தங்களது சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சிப் பொறுப்புகளில் ஊடுறுவிக் கொண்டனர், ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு அதனை தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டனர். இத்தகைய சுயநலக் காரர்கள் தான், உதுமான் (ரலி) அவர்களது நற்பெருக்குக் களங்கள் விளைவித்தனர். உதுமான் (ரலி) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், அவரது மரணத்திற்குப் பின் விளைந்த அமைதியற்ற நிலை, ஆகிய அனைத்தின் மூல வேர்களும் மேலே உள்ள சுயநலக்காரர்களின், சுயநலத்திலிருந்து தான் ஆரம்பமாகின்றன. எனவே, அவர்களை ஆட்சி மற்றும் அதிகாரப் பொறுப்பில் இருந்து அகற்றுவது வரை, இனி மதீனாவில் நிம்மதி திரும்பப் போவதில்லை. எனவே, பிரச்னையின் மூல வேர்களைக் களைந்தாலொழிய இந்தப் பிரச்னைக்கான சரியான தீர்வை எட்ட முடியாது என்பதில் உறுதியாக இருந்த அலீ (ரலி) அவர்கள், இப்பொழுது அதன் ஆணி வேர்களைக் களைவதற்குண்டான முயற்சியில் இறங்கினார்கள்.

கருத்துகள் இல்லை: