நுபுவ்வத்தின் நோக்கம்

மனிதர்களை நேர்வழிப்படுத்துவதற்காகவும் அவர்களை பரிபூரணத்தின் பால் வழிகாட்டு வதற்குமாகவும் நபிமார்களையும் றஸூல்மார்களையும் இறைவன் இவவுலகுக்கு அனுப்பி வைத்தான். நபிமார்கள் அனுப்பப்பட்டிருக்கவில்லையெனில், மனிதப் படைப்பின் நோக்கம் தெளிவற்றதாகப் போயிருப்பதோடு, மனிதர்களும் வழிகேட்டில் மூழ்கும் நிலை தோன்றியிருக்கும்.
அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு சாதகமாக யாதொரு ஆதாரமும் இல்லாதிருப்பதற்காக, தூதர்கள் பலரை நன்மாராயம் கூறுபவர்களாகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அவன் அனுப்பி வைத்தான். மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனும் தீர்க்கமான அறிவுடையோனுமாவான்.|| (04:165(
உலகுக்கு வந்த நபிமார்களுள் ஐந்து போர் உலுல்அஸ்ம் என நாம் நம்புகின்றோம். அவர்கள் புதிய வேதம், புதிய சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தவர்கள் ஆவர். அவர்களில் முதன்மையானவர் ஹஸ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் ஆவார். ஏனையோர், நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரோடு இறுதித் தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும் ஆவர்.
''மேலும் நபிமார்களிடமிருந்தும், உம்மிடமிருந்தும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடம் இருந்தும் அவர்களின் உறுதி மொழியை எடுத்த சமயத்தில், அவர்களிடமிருந்து மிக்க உறுதியான உறுதி மொழியையே நாம் எடுத்தோம் என்பதனை நினைவு கூறுவீராக.' (33: 07(
)நபியே!) ரசூல்மார்களில் உலுல் அஸ்ம்கள் பொறுமை கொண்டிருந்தது போல் நீரும் பொறுமை கொண்டிருப்பீராக.'46:35(
பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் உலகிற்கு வந்த இறைத்தூதர்களில் இறுதியானவர் என்றும் அவர்கள் உலகிற்கு அறிமுகப்படுத்திய இஸ்லாம் மார்க்கம், அனைத்து உலகத்தாருக்கும் அனைத்து காலப்பகுதிக்கும் ஏற்ற இறுதி நாள்வரை நடைமுறைப் படுத்தப்படக் கூடிய மார்க்கமாகும் என்றும் நாம் நம்புகின்றோம். இஸ்லாம் மனிதர்களது அன்றாட மற்றும் அவர்களது ஆன்மீக-இலௌகீக வாழ்வுத் தேவைகளையும், படைப்பின் குறிக்கோளையும் பூர்த்தி செய்யத்தக்க அறிவு, சட்டதிட்டங்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்குகிறது. எனவே, பெருமானாருக்குப் பின்னர், புதிதாக நபித்துவம் அல்லது புதிய வேதம் பெற்றிருப்பதாகக் கூறுவதும் அதனை நம்புவதும் முற்றிலும் பொய்யான, நிராகரிக்கப்பட வேண்டிய விசயமாகும்.
உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மத் தகப்பனாக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களில் இறுதியானவராகவும் இருக்கின்றார். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.|| (33: 40)

கருத்துகள் இல்லை: